Wednesday 11 September 2013

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருகிப்போய்க் கிடந்தஇந் நாட்டிடை வந்தே

உருகி உருகி உயிரைத் தேய்த்தே
ஒளியைப் பரப்பிய

ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் -
ஊசிய

கருத்தை உரைத்த புராணங்கள்,
வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் -
ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா?

சேற்றில் புழுக்களாய் - சிற்றுயிர் இனங்களாய் -
மாற்றிட இயலா மந்தை ஆடுகளாய் -
வழிவழிப் பார்ப் பனர் வந்து புகுத்திய
ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்
சிறந்தநல் லறிவையும்
ஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையை யும்

ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்
நாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்
ஆட்சி நலத்தையும்,
கொண்டஓர் இனத்தைப்
பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த -
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,
மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,

அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ரரசனை
இழிப்புரை சொல்வதா?

சொல்லியிங் கிருப்பதா ?

பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா?

நச்சு விதைகளா, நயந்துஅவர் சொன்னவை?

பச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை?

பார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய
ஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ?

ஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின்
வேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ?


- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Friday 11 January 2013

மக்களிடம் நூல் வாசிக்கும் ஆர்வம் குறைந்து விட்டதா?

   சென்னையில் மாபெரும் நூல் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் எதிரொலியாக புதிய-தலைமுறை  தொலைகாட்சியில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் மக்களிடம் நூல் கற்கும் எண்ணம் குறைந்துவிட்டதா? அப்படியானால், அதன் காரணம் என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தனர். அதில் அவர்கள் கீறிய கருத்துக்களையும் என் கருத்துக்களையும் திரித்து இதோ...

பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில்லை
    பதிப்பாளர்கள், எழுத்தாளர்களின் படைப்பிற்கு தகுந்த பொருளோ, மதிப்போ அளிப்பதில்லை.  படைப்பிற்காக வழங்கப்படும் காப்புரிமையும், அதற்கான பங்கோ  எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை.

பதிப்பாளர்களுக்கு குமுகத்தின் மீதுள்ள அக்கறை குறைந்துவிட்டது
   பதிப்பாளர்கள் இதை  ஒரு வியாபாரமாக மட்டுமே பார்க்கிறார்கள். நாம் அனைவரும் உயிருள்ள மனிதர்கள் தான். அனைவருக்கும் பசியிருக்கும். எழுத்தாளர்களும் அப்படித்தான். பதிப்பாளர்களும் அப்படிதான். அவர்களும் பிழைப்புக்குத்தான் அவரவர் வேலைகளை செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு குமூகப் பொறுப்பிருக்கிறது. ஆனால் காலப்போக்கில் நாம் அனைவரும் வியாபாரம் ஒன்றையே குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான, ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. இதன் பதிப்பாக நல்ல நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாக போய்விட்டது.

  நான் ஒன்று இரண்டு வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் நூல்கள் கதைகளோடு சேர்த்து, அதற்கு பொருத்தமான வண்ணம் கலந்த அல்லது வண்ணம் இலாத படங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும். அதே போன்று அனைத்து கதைகளையும், கருத்துக்களயும் வண்ணம் கலந்த படங்களை கொண்டு மாணவர்கள் மனதில் ஆழப்பதிய வைக்கமுடியும். சினிமா நாயகர்களின் படங்களை பெரிதாகவும் வண்ணம் பொருந்தியும் நாம் தினமும் செய்தித் தாள்களில் காண்கிறோம். அவற்றிக்கு செய்யும் செலவை காட்டிலும் இதற்கு செலவு அதிகமோ?
 
நல்ல எழுத்தாளர்கள் குறைந்துவிட்டனர்.
   அப்பட்டமான உண்மைதான். நல்ல கருத்துக்களை சொல்லும் எழுத்தாளர்களை காட்டிலும், குமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடிய கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர். சினிகூத்து, டைம்பாஸ் போன்ற இதழ்களில், கட்டூரை எழுதுபவர்களும் எழுத்தாளர்களாக கொள்வோமானால்.

ஊடகங்கள் முற்றிலும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றன.
 
  பாலும் நீரும் பிரித்துண்ணும் அன்னம் போல, நல்ல நூல்களை  மட்டுமே பயிலல் வேண்டும்.
 ஆனால் ஒரு நூலை படிக்காமல், அது நல்ல நூலா? இல்லையா? என்று எப்படி அறிந்து கொள்வது. யாரேனும் ஒருவர் ஒரு நூலை  படித்து அதைப்பற்றி எடுத்துரைத்தால் நன்றாக இருக்குமல்லவா? அந்த பொறுப்பு ஊடகங்களுடையது.  அனைத்து பதிப்பகங்களும் பதிப்பிட்ட நூலின் ஒரு நகலை, ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி  வைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த ஊடகம், அந்த நூலை  படித்து அதன் விமர்சனத்தை  வெளியிடுகிறார்கள்? யாருக்கு அந்த அக்கறை  இருக்கிறது? ஊடகங்கள் நல்ல நூல்களை, மக்களுக்கு எடுத்துரைப்பது கிடையாது, என்னும் கருத்தை  யாராலாவது மறுக்க முடியுமா?


ஆசிரியர்கள் மாணவர்களை நூல்வாசிக்க அறிவுறுத்துவது கிடையாது 
   எந்த ஒரு நல்ல பழக்க வழக்கமாக இருந்தாலும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக குழந்தைகளின் மனதில் விதைப்பது சாலச்சிறந்த்து. நூல்களை  கற்கும் பழக்கமும் தான். அதை சொல்லித்தர வல்லவர்கள் ஆசிரியர்கள். ஆனால், ஆசிரியர்கள் மாணவர்களை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுகிறார்களே  தவிர, வேறு ஒன்றும் உருப்படியாக செய்வதாய் எனக்கு தெரிவதில்லை. ஆமாம். நான் இன்னமும் ஒரு மாணவன் தான்.   ஏன் அவர்களே முதலில் நூல்களை  வாசிப்பது கிடையாது என்பது என் கருத்து. வேலை கிடைத்து, இதற்கு பிறகு ஏன் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.


பெற்றோர்கள், பிள்ளைகளை பாடம் தவிர்த்து வேறு நூல்களை வாசிக்க அனுமதிப்பது கிடையாது
  பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். தாங்கள் அதை  பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி மார்தட்டிக் கொள்ள வெண்டும். பிள்ளைகள் என்ன கற்றார்கள் என்பது அவர்ளுக்கும் தெரியாது. தாங்கள் என்ன கற்கிறோம் என்பது பிள்ளைகளுக்கும் தெரியாது. பாடம் தவிர்த்து வேறு நூல்களை கற்க சூழ்நிலை அமைத்து தராத பெற்றொர்கள் தான் நம் நாட்டில் அதிகம்.

மக்கள் நூல் கற்பதை நான்காம் செலவாக கருதுகின்றனர்
  உணவு, உடை, உறைவிடம் இது மூன்றும் போக நூல்களை  வாங்குவதற்கும் செலவிடும் பணத்தையும், காலத்தையும் வீண் செலவு என்றே மக்கள் நினைக்கிறார்கள். மேற்கூரியது போல வேறு நூல்களை கற்பது தேவையற்றது. அதை ஏன் செய்யவேண்டும்? "அந்த நூல் வாங்கும் காசு இருந்தால் நான் என் கைபேசிக்கு பணமேற்றுவேன்" என்று சொல்ல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நான் ஒரு பொறியில் கல்லூரியில் ப்டிக்கிறேன். தொழில்நுட்பமும், என் ஒரு துறைச் சார்ந்த நூல்களை  கற்கவே காலம் போதாது, என்பது என் நிலை. ஏன் சில மாதங்களுக்கு முன்பு நான் ஏன் என் துறை சாரத வேறு நூல்களை கற்க வேண்டும் என்று எனக்குள்ளேயே கேள்வி எழுந்தது. எவ்வளவு அபாயமான எண்ணம் அது? இது போன்ற எண்ணங்களும் மக்களுக்கு தோன்றலமா? அது தோன்றும் அளவிற்கான காரணிகளை  நாம் தான் உருவாக்கலாமா?

   மக்கள் தவறான ஆட்களை, தங்கள் முன்னொடியாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலானோர், சினிமா நட்சத்திரங்கள். பல நூல் வெளியீட்டு விழாவிற்கு சினிமாக்காரர்கள் வந்தால் தான், அங்கே மக்கள் எண்ணிக்கையை பார்க்கமுடியும் என்பது, நாடறிந்த உண்மை. சினிமாக்காரர்களுக்கு கொடுக்கும் மதிப்பில் பாதியையாவது எழுத்தாளர்களுக்கு கொடுக்கலாமே.

  ஒரு நாளைக்கு பல நூறு குறுஞ்சசெய்திகளை படிக்கும் ஆற்றல் பெற்றவர்களுக்கு, படிக்க தெரியாது என்று சொன்னால் மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

  அனைத்து பதிப்பகங்களும் சரியில்லை,
  அனைத்து எழுத்தாளர்களும் சரியில்லை,
  அனைத்து ஊடகங்களும் சரியில்லை,
   என்பது இதன் பொருளில்லை.

Monday 7 January 2013

தமிழ் நாட்காட்டி - ௨௦௪௪ (2044)

     சிலவற்றைச் செய்யவேண்டும் என்ற எண்ணம், நமக்குள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதைச் செய்து முடித்துவிட்டு வெளியிடும் முச்சு, அதற்கு ஈடேது?

    வெகுநாட்களாக, தமிழ் நாட்காட்டி வரையவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இதோ அது உங்கள் பார்வைக்கும், பயன்பாட்டிற்கும். இதை செய்து முடிப்பதற்கு, துணை நின்ற என் இளையவன், புகழ்ச்செல்வனுக்கும், என்தோழர்கள் வெற்றியரசனுக்கும் இமயவர்மனுக்கும் என் நன்றிகள்...



நாட்காட்டி
   ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையய் முதலாய்க் கொண்டு தொடங்குகிறது. ஞாயிறு முதலாய் திங்கள், செவ்வாய், அறிவன்(புதன்), வியாழன், வெள்ளி, காரி(சனி)-யோடு முடிவடைகிறது. இது நானும், என்னைச் சேர்ந்தாரும் தேற்றியவற்றைக் கொண்டு வடிவமைக்கபட்டது. பிழையிருந்தால், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்.

   திருத்தம்: ஐயா க.தமிழமல்லன், அவர்கள் எடுத்துரைத்தபடி, "ஆடவை" என்பது "இரட்டை" என்று மாற்றம் செய்யப்பட்டது. க.தமிழமல்லன் அவர்களின், உதவிக்கும், பாராட்டுகளுக்கும் என் நன்றிகள் பல...

 ~ வணங்காமுடி

Sunday 6 January 2013

இதுவரை செய்தது பெரிய தவறு...

    எத்தனையோ  நாட்கள் நான் ஏன் வலைப்பூ பதிவுகள் எழுத வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். நான் எழுதினால் மட்டும் இந்த மக்கள் திருந்தி விடுவார்களா என்ன? என்று எண்ணி இருக்கிறேன்.

   இந்த குமுகாயத்தை ஒரு சிலந்தி வலை போன்று எண்ணுவோமானால், வலையில் இருக்கும் சந்த்திப்புக்களை வெவ்வேறு துறைகளாக கொள்வோமேயானால், அதில் ஏதேனும் ஒன்றில், ஒழுக்கம் இருக்கும், அவற்றின் துணை கொண்டு அதை பரப்பலாம், என்று எண்ணியிருந்தேன். தேடினேன். எழுத்தாளர்களின் பங்குதான் அதில் ஓங்கியிருந்தது. எழுத்தாளனாக இருந்தாலும், எழுதுவதற்கு நல்ல பொருள், வேண்டுமல்லவா? அதை எடுப்பதற்கு எங்கு போவது.

    இருப்பினும், எழுத்தை நிறுத்தகூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். தாமதத்திற்கு, வருந்துகிறேன். இனி என் பணி தொடரும். நன்றி.