Wednesday 11 September 2013

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருகிப்போய்க் கிடந்தஇந் நாட்டிடை வந்தே

உருகி உருகி உயிரைத் தேய்த்தே
ஒளியைப் பரப்பிய

ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் -
ஊசிய

கருத்தை உரைத்த புராணங்கள்,
வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் -
ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா?

சேற்றில் புழுக்களாய் - சிற்றுயிர் இனங்களாய் -
மாற்றிட இயலா மந்தை ஆடுகளாய் -
வழிவழிப் பார்ப் பனர் வந்து புகுத்திய
ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்
சிறந்தநல் லறிவையும்
ஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையை யும்

ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்
நாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்
ஆட்சி நலத்தையும்,
கொண்டஓர் இனத்தைப்
பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த -
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,
மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,

அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ரரசனை
இழிப்புரை சொல்வதா?

சொல்லியிங் கிருப்பதா ?

பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா?

நச்சு விதைகளா, நயந்துஅவர் சொன்னவை?

பச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை?

பார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய
ஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ?

ஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின்
வேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ?


- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Friday 11 January 2013

மக்களிடம் நூல் வாசிக்கும் ஆர்வம் குறைந்து விட்டதா?

   சென்னையில் மாபெரும் நூல் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் எதிரொலியாக புதிய-தலைமுறை  தொலைகாட்சியில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் மக்களிடம் நூல் கற்கும் எண்ணம் குறைந்துவிட்டதா? அப்படியானால், அதன் காரணம் என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தனர். அதில் அவர்கள் கீறிய கருத்துக்களையும் என் கருத்துக்களையும் திரித்து இதோ...

பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில்லை
    பதிப்பாளர்கள், எழுத்தாளர்களின் படைப்பிற்கு தகுந்த பொருளோ, மதிப்போ அளிப்பதில்லை.  படைப்பிற்காக வழங்கப்படும் காப்புரிமையும், அதற்கான பங்கோ  எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை.

பதிப்பாளர்களுக்கு குமுகத்தின் மீதுள்ள அக்கறை குறைந்துவிட்டது
   பதிப்பாளர்கள் இதை  ஒரு வியாபாரமாக மட்டுமே பார்க்கிறார்கள். நாம் அனைவரும் உயிருள்ள மனிதர்கள் தான். அனைவருக்கும் பசியிருக்கும். எழுத்தாளர்களும் அப்படித்தான். பதிப்பாளர்களும் அப்படிதான். அவர்களும் பிழைப்புக்குத்தான் அவரவர் வேலைகளை செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு குமூகப் பொறுப்பிருக்கிறது. ஆனால் காலப்போக்கில் நாம் அனைவரும் வியாபாரம் ஒன்றையே குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான, ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. இதன் பதிப்பாக நல்ல நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாக போய்விட்டது.

  நான் ஒன்று இரண்டு வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் நூல்கள் கதைகளோடு சேர்த்து, அதற்கு பொருத்தமான வண்ணம் கலந்த அல்லது வண்ணம் இலாத படங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும். அதே போன்று அனைத்து கதைகளையும், கருத்துக்களயும் வண்ணம் கலந்த படங்களை கொண்டு மாணவர்கள் மனதில் ஆழப்பதிய வைக்கமுடியும். சினிமா நாயகர்களின் படங்களை பெரிதாகவும் வண்ணம் பொருந்தியும் நாம் தினமும் செய்தித் தாள்களில் காண்கிறோம். அவற்றிக்கு செய்யும் செலவை காட்டிலும் இதற்கு செலவு அதிகமோ?
 
நல்ல எழுத்தாளர்கள் குறைந்துவிட்டனர்.
   அப்பட்டமான உண்மைதான். நல்ல கருத்துக்களை சொல்லும் எழுத்தாளர்களை காட்டிலும், குமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடிய கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர். சினிகூத்து, டைம்பாஸ் போன்ற இதழ்களில், கட்டூரை எழுதுபவர்களும் எழுத்தாளர்களாக கொள்வோமானால்.

ஊடகங்கள் முற்றிலும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றன.
 
  பாலும் நீரும் பிரித்துண்ணும் அன்னம் போல, நல்ல நூல்களை  மட்டுமே பயிலல் வேண்டும்.
 ஆனால் ஒரு நூலை படிக்காமல், அது நல்ல நூலா? இல்லையா? என்று எப்படி அறிந்து கொள்வது. யாரேனும் ஒருவர் ஒரு நூலை  படித்து அதைப்பற்றி எடுத்துரைத்தால் நன்றாக இருக்குமல்லவா? அந்த பொறுப்பு ஊடகங்களுடையது.  அனைத்து பதிப்பகங்களும் பதிப்பிட்ட நூலின் ஒரு நகலை, ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி  வைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த ஊடகம், அந்த நூலை  படித்து அதன் விமர்சனத்தை  வெளியிடுகிறார்கள்? யாருக்கு அந்த அக்கறை  இருக்கிறது? ஊடகங்கள் நல்ல நூல்களை, மக்களுக்கு எடுத்துரைப்பது கிடையாது, என்னும் கருத்தை  யாராலாவது மறுக்க முடியுமா?


ஆசிரியர்கள் மாணவர்களை நூல்வாசிக்க அறிவுறுத்துவது கிடையாது 
   எந்த ஒரு நல்ல பழக்க வழக்கமாக இருந்தாலும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக குழந்தைகளின் மனதில் விதைப்பது சாலச்சிறந்த்து. நூல்களை  கற்கும் பழக்கமும் தான். அதை சொல்லித்தர வல்லவர்கள் ஆசிரியர்கள். ஆனால், ஆசிரியர்கள் மாணவர்களை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுகிறார்களே  தவிர, வேறு ஒன்றும் உருப்படியாக செய்வதாய் எனக்கு தெரிவதில்லை. ஆமாம். நான் இன்னமும் ஒரு மாணவன் தான்.   ஏன் அவர்களே முதலில் நூல்களை  வாசிப்பது கிடையாது என்பது என் கருத்து. வேலை கிடைத்து, இதற்கு பிறகு ஏன் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.


பெற்றோர்கள், பிள்ளைகளை பாடம் தவிர்த்து வேறு நூல்களை வாசிக்க அனுமதிப்பது கிடையாது
  பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். தாங்கள் அதை  பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி மார்தட்டிக் கொள்ள வெண்டும். பிள்ளைகள் என்ன கற்றார்கள் என்பது அவர்ளுக்கும் தெரியாது. தாங்கள் என்ன கற்கிறோம் என்பது பிள்ளைகளுக்கும் தெரியாது. பாடம் தவிர்த்து வேறு நூல்களை கற்க சூழ்நிலை அமைத்து தராத பெற்றொர்கள் தான் நம் நாட்டில் அதிகம்.

மக்கள் நூல் கற்பதை நான்காம் செலவாக கருதுகின்றனர்
  உணவு, உடை, உறைவிடம் இது மூன்றும் போக நூல்களை  வாங்குவதற்கும் செலவிடும் பணத்தையும், காலத்தையும் வீண் செலவு என்றே மக்கள் நினைக்கிறார்கள். மேற்கூரியது போல வேறு நூல்களை கற்பது தேவையற்றது. அதை ஏன் செய்யவேண்டும்? "அந்த நூல் வாங்கும் காசு இருந்தால் நான் என் கைபேசிக்கு பணமேற்றுவேன்" என்று சொல்ல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நான் ஒரு பொறியில் கல்லூரியில் ப்டிக்கிறேன். தொழில்நுட்பமும், என் ஒரு துறைச் சார்ந்த நூல்களை  கற்கவே காலம் போதாது, என்பது என் நிலை. ஏன் சில மாதங்களுக்கு முன்பு நான் ஏன் என் துறை சாரத வேறு நூல்களை கற்க வேண்டும் என்று எனக்குள்ளேயே கேள்வி எழுந்தது. எவ்வளவு அபாயமான எண்ணம் அது? இது போன்ற எண்ணங்களும் மக்களுக்கு தோன்றலமா? அது தோன்றும் அளவிற்கான காரணிகளை  நாம் தான் உருவாக்கலாமா?

   மக்கள் தவறான ஆட்களை, தங்கள் முன்னொடியாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலானோர், சினிமா நட்சத்திரங்கள். பல நூல் வெளியீட்டு விழாவிற்கு சினிமாக்காரர்கள் வந்தால் தான், அங்கே மக்கள் எண்ணிக்கையை பார்க்கமுடியும் என்பது, நாடறிந்த உண்மை. சினிமாக்காரர்களுக்கு கொடுக்கும் மதிப்பில் பாதியையாவது எழுத்தாளர்களுக்கு கொடுக்கலாமே.

  ஒரு நாளைக்கு பல நூறு குறுஞ்சசெய்திகளை படிக்கும் ஆற்றல் பெற்றவர்களுக்கு, படிக்க தெரியாது என்று சொன்னால் மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

  அனைத்து பதிப்பகங்களும் சரியில்லை,
  அனைத்து எழுத்தாளர்களும் சரியில்லை,
  அனைத்து ஊடகங்களும் சரியில்லை,
   என்பது இதன் பொருளில்லை.

Monday 7 January 2013

தமிழ் நாட்காட்டி - ௨௦௪௪ (2044)

     சிலவற்றைச் செய்யவேண்டும் என்ற எண்ணம், நமக்குள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதைச் செய்து முடித்துவிட்டு வெளியிடும் முச்சு, அதற்கு ஈடேது?

    வெகுநாட்களாக, தமிழ் நாட்காட்டி வரையவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இதோ அது உங்கள் பார்வைக்கும், பயன்பாட்டிற்கும். இதை செய்து முடிப்பதற்கு, துணை நின்ற என் இளையவன், புகழ்ச்செல்வனுக்கும், என்தோழர்கள் வெற்றியரசனுக்கும் இமயவர்மனுக்கும் என் நன்றிகள்...



நாட்காட்டி
   ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையய் முதலாய்க் கொண்டு தொடங்குகிறது. ஞாயிறு முதலாய் திங்கள், செவ்வாய், அறிவன்(புதன்), வியாழன், வெள்ளி, காரி(சனி)-யோடு முடிவடைகிறது. இது நானும், என்னைச் சேர்ந்தாரும் தேற்றியவற்றைக் கொண்டு வடிவமைக்கபட்டது. பிழையிருந்தால், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்.

   திருத்தம்: ஐயா க.தமிழமல்லன், அவர்கள் எடுத்துரைத்தபடி, "ஆடவை" என்பது "இரட்டை" என்று மாற்றம் செய்யப்பட்டது. க.தமிழமல்லன் அவர்களின், உதவிக்கும், பாராட்டுகளுக்கும் என் நன்றிகள் பல...

 ~ வணங்காமுடி

Sunday 6 January 2013

இதுவரை செய்தது பெரிய தவறு...

    எத்தனையோ  நாட்கள் நான் ஏன் வலைப்பூ பதிவுகள் எழுத வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். நான் எழுதினால் மட்டும் இந்த மக்கள் திருந்தி விடுவார்களா என்ன? என்று எண்ணி இருக்கிறேன்.

   இந்த குமுகாயத்தை ஒரு சிலந்தி வலை போன்று எண்ணுவோமானால், வலையில் இருக்கும் சந்த்திப்புக்களை வெவ்வேறு துறைகளாக கொள்வோமேயானால், அதில் ஏதேனும் ஒன்றில், ஒழுக்கம் இருக்கும், அவற்றின் துணை கொண்டு அதை பரப்பலாம், என்று எண்ணியிருந்தேன். தேடினேன். எழுத்தாளர்களின் பங்குதான் அதில் ஓங்கியிருந்தது. எழுத்தாளனாக இருந்தாலும், எழுதுவதற்கு நல்ல பொருள், வேண்டுமல்லவா? அதை எடுப்பதற்கு எங்கு போவது.

    இருப்பினும், எழுத்தை நிறுத்தகூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். தாமதத்திற்கு, வருந்துகிறேன். இனி என் பணி தொடரும். நன்றி.

Saturday 15 September 2012

கூடங்குளம்: அச்சுதானந்தன் அவர்களின் கட்டூரை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வி.எஸ். அச்சுதானந்தன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர். கட்சியின் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராகக் கூடன்குளம் மக்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை, இந்தியச் சூழலில் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  

பின்வருவன கட்டூரையின் தொகுப்பு


 கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரும், நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான்வெளித் தூரத்தில் கூடன்குளத்தில் ஒரு அணுமின் நிலையம் செயல்படப்போகிறது.

நமது மின் உற்பத்திதுறைக்கு அணுமின் நிலையம் அவசியமா? அணுமின் நிலையங்களின் செயல்பாடு சுற்றுபுறவாசிகளுக்கும் சுற்றுபுற சூழலுக்கும் பாதிப்பை உண்டு பண்ணுமா?
கூடன்குளத்திற்கு அணுமின் நிலையம் பொருத்தமானதா?
அங்கு கட்டப்படும் மின் நிலையம் பாதுகாப்பனதா?

இவற்றையெல்லாம் பரிசீலினை செய்யவேண்டியது முக்கியமான அவசியமாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் அணுசக்திக்கு மாறும்போது, இந்தியா மட்டும் ஒதுங்கி இருக்க முடியுமா? என்கிற வாதம் யாதார்த்த நிலைக்கு எதிரானது.

இன்று உலகத்திலுள்ள 205 நாடுகளில் 31 நாடுகள் மட்டும்தான், மின் தேவைக்காக அணுமின் நிலையங்களை சார்ந்துள்ளது.

உலகத்தின் யூரேன்யம் உற்பத்தியில் 23 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால், அங்கு இதுவரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை.

உலகத்தின் மின்தேவையில் வெறும் 7 சதவீதம் மட்டுமே அணுசக்தி வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், "அணுமின் நிலையங்களை தவிர்க்க முடியாது" என்கிற வாதம் அடிப்படையற்றது. "மிகவும் சிக்கனமான மின் உற்பத்திகான வழிமுறைதான் அணுமின் நிலையங்கள்" என்பதும் சரியல்ல.

"விபத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமுள்ளதும், அதிகப்படியான கட்டுமான செலவுகளை ஏற்படுத்துவதுமான அணுமின் நிலையங்களுக்கு கடன் அளிப்பதில்லை" என்று, 2007-ல் அமெரிக்காவின் முக்கியமான ஆறு வங்கிகள் அமெரிக்காவின் எரிசக்தித் துறைக்கு தெரிவித்துள்ளன.

"இது மிகவும் லாபகரமான மின் உற்பத்திக்கான அடிப்படை" என்பது பன்னாட்டு அணு நிறுவனங்களுக்கு உதவிபுரிவதற்காக சொல்லப்படும் ஒரு பொய் பிரசாரமாகும்.

கர்நாடக மாநிலம் கைகாவில், 230 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு ரியாக்டர்கள் செயல்படுகிறது. இவை ஒவ்வொன்றிருக்கும் அரசு அளித்த ஹெவி வாட்டர் மானியம் மட்டும் 1,450 கோடி ரூபாய்.
என்றாலும் மின்கட்டணம் யூனிட்டிற்கு 2.90 ரூபாயாக உள்ளது.

எந்தவொரு திட்டத்திற்கும், 'அதை தொடங்கும்போதுள்ள கட்டுமான செலவு, அவசியமான எரிபொருள், அதன் விலை, செயல்படும்போது ஜீவராசிகளுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்படும் பிரச்சனைகள், விபத்திற்கான சாத்தியங்கள், விபத்து நிவாரணம், கழிவு மேலாண்மை' என்பவற்றை கணக்கிலெடுக்க வேண்டும்.

இவை ஒவ்வொன்றையும் பரிசீலித்தால், ஒன்றில்கூட அணுமின் நிலையங்களுக்கு பாஸ் மார்க் கொடுக்க முடியாது.

அணுமின் நிலையத்தின் செயல்பாட்டிலிருந்து உண்டாகும் அணு கழிவுகள், மற்ற கழிவுகளைப்போல அல்ல. அவற்றை அழிக்க ஆக்கப்பூர்வமான முறைகள் எதுவும் நடைமுறையில் இல்லை.

அமெரிக்காவிலும் பிரான்சிலும் மின் உற்பத்தி செய்து முடிந்த பல அணுமின் நிலையங்கள், இன்றுவரி குளிர்விப்பதற்காக வேண்டி செயல்பட்டு வருகிறது. இது, இந்த கழிவுகளை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததினால் ஆகும்.

அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் இரத்த சோகை, தைராய்டு கேன்சர் முதலிய கடுமையான நோய்கள் படர்ந்து பரவுதாக பல்வேறு ஆய்வுகள் தெளிவாக்குகிறது.

இந்த ஆய்வுகளை தாமதப்படுத்தும் முயற்சிகள், அணுமின் நிலைய அதிகாரிகளின் பக்கமிருந்து செய்யப்படுகிறது.

பன்னாட்டு அணு சக்தி நிறுவனம், உலக சுகாதார நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, 'ஐ.ஏ.இ.ஏ' -இன் அனுமதியின்றி, அணுகதிர் வீச்சு ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சனைகள் பற்றிய தகவல்களை வெளியிடக்கூடாது.

இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதன் பின்னால் உள்ள நோக்கம் என்ன?

புக்கஷிமா அணுவிபத்திற்கு பிறகு, பன்னாட்டு கார்பரேட் ஊடகங்கள் வெளிபடுத்தும் மௌனமும் இத்துடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டும்.

மூன்றாம் உலக நாடுகளையும் கார்பரேட் ஊடகங்களையும் உலக சுகாதார நிறுவனங்களையும் இந்த அணு நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளது என்கிற குற்றசாட்டு உறுதியானது.

இந்த மௌனத்தை சான்றிதழாக மாற்றுகின்ற, சில மக்கள் விரோத விஞ்ஞானிகளும் உடன் சேருகின்ற பேரபாயங்கள், மீண்டும் நிகழ்த்தப் படுகிறது.
அணுமின் நிலையங்கள் செயல்பட மிக அதிகமான தண்ணீர் அவசியம். கூடன்குளத்தின் 1000 மெகாவாட் ரியாக்டருக்கு, தினமும் 51 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆறு ரியாக்டர்கள் செயல்படத் தொடங்கினால், தினமும் 2.02 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

இவ்வளவு அதிகமான தண்ணீரை மிகவும் சக்தியாக உறிஞ்சும்போது, கடலில் மீன் உட்பட எல்லா ஜீவராசிகளும் இல்லாமல் போகும். மீன்கள் அணு உலைக்குள் செல்லாமல் இருக்க அரிப்புகள் வைக்கப்பட்டுள்ளதாக வாதம் செய்கின்றனர். ஆனால், இதுபோன்ற அரிப்புகளில் வேகமாக மோதும் பெரிய மீன்கள்கூட செத்துபோகின்றன என்பது தான் இதுவரையுள்ள அனுபவங்கள் உணர்த்துகிறது.

அணுமின் நிலையத்தின் பயன்பாட்டிற்கு பிறகு, அணு கழிவுகளை உட்கொண்ட வெப்ப நீர், அன்றாடம் கடலில் திறந்துவிடப்படுகிறது. இதனால், 140 டிகிரிக்கு சமீபமுள்ள கடலின் வெப்பநிலை, கிட்டதட்ட 13 டிகிரி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தொரிவிக்கின்றன.

இது கடலின் உயிர் சுழற்சியை பாழாக்குகிறது. பின்பு மீன் பிடிப்புத் தொழிலை காலப்போக்கில் இல்லாமலாக்குகிறது.

"அணுமின் நிலையங்களில் உபயோகிக்கப்படும் எரிபொளை மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதால், அணு கழிவுகள் குறைவாகவே வரும்" என்பது கண்களை மூடிக்கொண்டு இருட்டு என்பதற்கு ஒப்பாகும்.

மறுசுழற்சி செய்வது வெறும் 1 மட்டுமே. 1000 மெகாவாட்ட திறனுள்ள ஒரு அணுமின் நிலையம், ஒரு வருடம் குறைந்தது 30 டன் அணு கழிவுவை வெளியேற்றும். கேன்சரும் மரபு ரீதியான பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். இந்த, தீய பூதத்தைதான் கடலில் தள்ளுகின்றனர்.

அணுமின் நிலையங்களின் விபத்திற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். கையாள்பவரின் கவனக்குறைவு, இயந்திர கோளாறு, இயற்கை சீற்றம் முதலியவற்றால், முக்கியமான விபத்துகள் ஏற்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில், தாக்குதல் அபாயங்களையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

பிற விபத்துகள் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு என்றால், அணுமின் நிலைய விபத்துகள் ஒரு தொடர்ச்சியாகும். அதை நமது, வரப்போகும் தலைமுறைகளும் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

1986-ல், ஏப்ரல் 26 அன்று செர்நோபில் அணு விபத்து ஏற்படும்போது 1986 முதல் 2004 வரை 9,85,000- மரணங்கள், இதன் காரணமாக உண்டானதாக புள்ளிவிபரங்கள் தொரிவிக்கின்றன.
அணுக் கழிவினால் மனிதனுக்கும், பிராணிகளுக்கும், ஜீவராசிகளுக்கும் நோய் அணுக்களுக்கும் ஜீன்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு பரிதாபமான விஷயம்.

செர்னேபில் மற்றும் அதற்கு முன் ஏற்பட்ட அயர்லாந்து உள்ள திரீமைல் விபத்தினுடைய பாடத்தை கற்று, அதன் பிறகு கட்டப்படும் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானது என்பது, பின்புள்ள பிரச்சாரம்.

ஆனால், 2011- மார்ச் 11 அன்று உலகத்தை நடுங்க வைத்துகொண்டு ஜப்பானில் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டது. பூகம்பமும் சுனாமியும் சேர்த்து, அங்குள்ள 3 ரியாக்டருகளும் உபயோகித்த அணுக் கழிவை பாதுகாத்து வைத்திருந்த 4 தொட்டிகளும் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தின் ஆழத்தை, இனிதான் உலகம் அறியப்போகிறது.

காற்று கடலை நோக்கி வீசியதால், 80 அணு பொருட்களும் பசிபிக் கடலில் கலந்ததன் காரணமாக, ஜப்பான் என்கிற நாட்டின் மிச்சமீதி இன்று இருக்கிறது. ஆனால், அணு உலையை குளிரூட்ட உபயோகித்த கடல் நீரில், 12,000 டன் நீர் புக்கஷிமா நிலையத்தின் அஸ்திவாரத்தில் தேங்கி நிற்கிறது.

இதில் 6 சதவீதம், புளூட்டேனியம் அடங்கிய மோக்ஸ் எனப்படும் அணு பொருட்களாகும். இது, ஹிரோஷிமாவில் விழுந்த அணு குண்டு விபத்தைவிட, பத்து மடங்கு அபாயமானதாகும். தேங்கி நிற்கும் இந்நீர், கடலில் கலக்கும்போதுதான் இதன் முழுமையான அபாயம் தெரிய வரும். அதை, வரும் தலைமுறைகளும் அனுபவிக்க வேண்டியது வரும்.

மே மாதம் 2012-ல், ஜப்பான் தனது 54 அணுமின் நிலையங்களையும், ஜெர்மனி தனது 17 அணுமின் நிலையங்களையும் இழுத்து மூடி விட்டது. இத்தாலி அணுமின் நிலையங்களே வேண்டாம் என்று வைத்து விட்டது.

விபத்துகளிலிருந்து மேற்கண்ட நாடுகள் பாடம் படித்தபோது, இந்தியா அதை நோக்கி நகருகிறது.

அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்து, அணு ஆயுத ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மன்மோகன்சிங் அரசு, புகுஷிமாவுக்கு பிறகும் கூடன்குளம் திட்டத்தை முன் நடத்துகிறது.

இந்த திட்டத்தில் விபத்து நேரிட்டால், தமிழகத்தின் தென்பாகம், கர்நாடகாவின் தென்பாகம், கேரளமும் இலங்ககையும் கிட்டத்தட்ட பூரணமாக அபாகரமான எல்லைக்குள் வரும்.

அதனால்தான், கூடன்குளம் என்கிற இடம் இந்த திட்டத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தம் என்பதை பாரிசீலனைச் செய்ய வேண்டியது, நம்மை பொறுத்த வரை தவிர்க்க முடியாததாகிறது.

"புக்கஷிமாவில் ஏற்பட்டது பூகம்பம் மற்றும் சுனாமியால் ஏற்பட்டதாகும். அல்லாமல், தொழில் நுட்பக் கோளாரால் ஏற்பட்டதல்ல" என்று அணுமின் நிலையங்களை ஆதரிப்பவர்கள் வாதம் செய்கின்றனர்.

உண்மையில், பூகம்பம் உண்டானதால் ஏற்பட்ட மின்சார பிரச்சனைதான்(மின்சாரம் இல்லாததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை) இந்தப் பேரழிவிற்கான தொடக்கம். கூடன்குளத்தில் மின்சார பிரச்சனை ஏற்பட, பூகம்தான் உண்டாக வேண்டுமென்பதில்லை.

இந்திய அரசு வெளியீடும் ‘வனரபிலிட்டி அட்லஸ்’ -ன்படி, கூடன்குளம் பிரதேசம்-3 பூகம்பத்திற்கான சாத்தியமுள்ள பகுதி. அபூவர்மான எரிமலைகள் உள்ள இடமாகும்.

கூடன்குளத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில், மன்னார் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் எரிமலைகள் உள்ளது. கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில், 1998-லும் 2008-லும் பூமிக்கடியில் பாறைகள் உருகி வடியும் சம்பவங்கள் நடந்துள்ளது.

2004-ல் சுனாமியால் சின்னபின்னமாகப்பட்ட கன்னியாகுமாரி குளச்சல் பகுதிகளுக்கு அருகே தான் கூடன்குளம் உள்ளது. 1986-ல் அணு சக்தித்துறை வெளியிட்ட அறிக்கை, "இந்திய கடலோரங்களில் சுனாமிக்கான சாத்தியகூறுகள் இல்லாததினால், புயலை மட்டும் கணக்கில் கொண்டால் போதும்" என்கிறது.

2001-ல் கூடன்குளம் அணுமின் நிலைய கட்டுமானங்கள் தொடங்கியது. எனவே, 2004-ல் சுனாமி தாக்குதலை கணக்கிலெடுத்து, அரசு தன்னுடைய திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும்.

ஆனால், "சுனாமி தாக்குதலை கவனத்தில் எடுத்திருந்ததும், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்" என்று இப்போது மத்திய அரசு சொல்கிறது சொல்கிறது.


"இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது மக்களுக்கல்ல! அணு ஆயுத நிறுவனங்களுக்குத்தான்" என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று எதுவும் தேவையா?

கடந்த மூன்று வருடங்களில், அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் , மூன்று இடங்களில் மழைநீர் பூமியை பிளந்து கிணறு வடிவத்தில் பூமிக்கடியில் போன நிகழ்வும் நடந்துள்ளது.

சுருக்கமாக, கூடன்குளம் பிரதேசம் எந்த காரணத்தை கொண்டும் அணுமின் நிலையத்திற்கு பொருத்தாமனதல்ல.

இங்குதான் 600 மெகாவாட் சக்தியுள்ள ஆறு ரியாக்டர்கள் தொடங்க உத்தேசித்துள்ளனர். 2001-ல் கட்டத் தொடங்கிய இரண்டு ரியாக்டர்களும், அணு ஆயுத ஒப்பந்ததிற்கு பிறகு புதிதாக சேர்க்கப்பட்ட நான்கு ரியாக்டர்களும் இதில் அடங்கும்.

இப்போது கட்டுமானம் முடிந்த அணுமின் நிலையங்கள் சுற்றுபுறசூழல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் கட்டபட்டவையாகும். ஜெய்தாபூரில் இப்படி ஒரு சுற்றுப்புற சூழல் ஆய்வை, இந்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக இடதுசாரி கட்சிகள் பிரதமருக்கு புகார் அளித்திருந்தனர்.

'அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு நிலையத்தை நடத்தும் என்.பி.சி.எல் -லுக்குத்தான் என்று சொன்ன பிரதம மந்திரி, ஒப்பந்ததில் கையெழுத்திட்ட பிறகு விபத்து உண்டானால் யார் பொறுப்பு?' என்பதில் சந்தேகத்தை கிளப்புகிறார்.

அணுமின் நிலையங்களை ஆதரித்தவர்களுக்கெல்லாம் இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கிய அணு சக்தி ஒப்பந்ததில், பதினேழாம் பிரிவு "முழு உத்திரவாதமும் அணுமின் நிலையத்தின் இந்திய ஏஜென்சிகளுக்குத்தான்" என்று வரையெறுக்கப்பட்டுள்ளளது.

கூடன்குளத்தில் உபயோகிக்கப்படும் 'வி.வி.இ.ஆர்-100' என்கிற மாடலில், நிலையத்தில் பல தொழில் நுட்ப குறைபாடுகளும் உள்ளதாக அறிக்கையில் உள்ளது.

ஆனால், கூடன்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தின் பிரச்சனை இதிலும் அபூர்வமானது. முக்கியமான பாகங்களில் வெல்டிங் செய்யக்கூடாது என்பது ஒப்பந்ததின் முக்கிய ஷரத்து. ஆனால், 6 வெல்டிங்கள் உள்ள ரியாக்டர்கள் செயல்படப்போகிறது.

கூடன்குளத்தின் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று யார் சொன்னாலும், கண்முன்னால் பார்த்த பேரழிவுகளை இந்த தலைமுறைக்கு மறக்க முடியாது.

பாதுகாப்பு விஷயங்களில் இப்போதுள்ள பொறுப்பின்மையை இந்த அணு நிறுவனங்கள் தொடர்ந்தால், செர்நோபிலும் புக்கஷிமாவும் இங்கே நடக்குமென்று சி.ஏ.ஜ. தனது செயல்பாட்டு தணிக்கையில் முன் அறிவிப்பைச் கொடுத்திருக்கிறது.

அதனால், இந்த அணு ஆயுத வெடிகுண்டு நமக்கு வேண்டாம். நிலைத்திற்கான செயல்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரளமும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய இந்த பெரும் அபாயத்தை புரிந்துகொண்டு, கேரள அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அணு பிரதேசங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து எரிபொருளை நிரப்பி, திட்டத்தை தொடர்ந்து முன்னேற்றும் எண்ணத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்.

ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் நிற்கும் நாடுகள்கூட, விபத்து நேர்ந்த பிறகு 54 அணுமின் நிலையங்களை அடைத்து பூட்டி விட்டது.

மற்றவர்களின் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அணுமின் நிலையங்களுக்கு கொடுக்கும் மானியத்தை சூரியசக்தி மின்சாரத்திற்கு கொடுத்திருந்தால், அது நாட்டின் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண போதுமானதாக இருந்திருக்கும்.